செய்யாறு அரசு மருத்துவமனையில் தண்ணீர் பிரச்னையை தீர்ப்பதற்காக தூசி.கே.மோகன் எம்எல்ஏ, தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. ஒரு லட்சம் வழங்கி நடவடிக்கை மேற்கொண்டார்.
திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் கடந்த சில மாதங்களாக தண்ணீர் பிரச்னை இருந்து வந்துள்ளது. இதனை அறிந்த செய்யாறு தொகுதி எம்எல்ஏ தூசி. கே.மோகன் மருத்துவமனைக்கு செவ்வாய்க்கிழமை நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது, மருத்துவமனையில் ஏற்பட்டுள்ள தண்ணீர் பிரச்னை குறித்து மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனையில் உள்ள 5 ஆழ்துளைக் கிணறுகளில் ஒன்று மட்டும் இயங்குவதாகவும், இதனால் தண்ணீர் தேவையை நிறைவு செய்ய முடியவில்லை என்றும் தெரிவித்தனர். உடனடியாக தண்ணீர் பிரச்னையைத் தீர்க்க எம்எல்ஏ தனது சொந்தப் பணத்திலிருந்து ரூ. ஒரு லட்சம் வழங்கினார்.
அதில், ஆழ்துளைக் கிணறுகளில் உள்ள மோட்டார்களை பழுது நீக்கவும், புதிய மின் மோட்டார்கள் வாங்கி பொருத்தவும் அறிவுரை வழங்கினார். மேலும், திருவத்திபுரம் நகராட்சி ஆணையர் சி.ஸ்டான்லிபாபுவை வரவழைத்து தற்காலிகமாக வாகனம் மூலம் தண்ணீர் விநியோகம் செய்ய ஆலோசனை வழங்கினார். ஆய்வின்போது, மருத்துவர்கள் பாலகிருஷ்ணன், கார்த்திக், அதிமுக பிரமுகர்கள் டி.பி.துரை, மகேந்திரன், அரங்கநாதன், கே.வெங்கடேசன் ஏ.ஜனார்த்தனன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.