செய்யாறு அருகே நாட்டேரி அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், மோரணம் அரசு உயர்நிலைப் பள்ளியில் மலேரியா தினம் பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் செல்வராஜ் தலைமை வகித்தார். நாட்டேரி ஆரம்ப சுகாதார நிலைய ஆய்வாளர் கே.சம்பத் கலந்துகொண்டு குழந்தைகளுக்கு மலேரியா நோய் குறித்த தகவல்
களைத் தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
அப்போது, மலேரியா நோய் பிளாஸ்மோடியம் என்னும் ஒட்டுண்ணி மூலம் பரவுகிறது. பெண் அனோபிலிஸ் வகை கொசுக்கள் கடிப்பதன் மூலம் மலேரியா நோய் கண்ட மனிதனை உணவுக்காக ரத்தத்தை உறிஞ்சும் போது மலேரியா ஒட்டுண்ணிகள் ரத்தத்துடன் உறிஞ்சப்படுகிறது.
கொசுவின் உடம்பில் வளர்ச்சி அடைந்து பல்கி, பெருகி பத்து முதல் பதினைந்து நாள்களுக்கு பின்னர், கொசு ஆரோக்கியமான மனிதனை கடிக்கும் போது அவனது உடம்பில் ஒட்டுண்ணி கொசுவின் மூலம் செலுத்தப்படுகிறது.
ஐந்து முதல் ஏழு நாள்கள் காய்ச்சல், குளிருடன் கூடிய நடுக்கம், உடல்வலி, தலைவலி, நினைவு இழத்தல், நடக்க முடியாமை, மயக்கம், வாந்தி, சிறுநீர் பிரியாத நிலை, வயிற்றுப் போக்கு ஏற்படும்.
இந்நோயை அறிந்துகொள்ள அனைத்து அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையம், துணை சுகாதார நிலையம், கிராமப் புறங்களில் தன்னார்வ தொண்டர்கள் மூலம் ரத்த தடவல் பரிசோதனை செய்யப்படுகிறது என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.