சேத்துப்பட்டு வட்டத்தில் ஜமாபந்தி நிறைவு விழா மற்றும் விவசாயிகள் மாநாடு புதன்கிழமை நடைபெற்றது. மாநாட்டில் 125 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
சேத்துப்பட்டு வட்டாட்சியர் அலுவலகத்தில் ஜமாபந்தி கூட்டம் ஜூன் 7-ஆம் தேதி தொடங்கி 12-ஆம் தேதி வரை நடைபெற்றது.
இதில் தச்சாம்பாடி, தேவிகாபுரம், கொழப்பலூர், நெடுங்குணம் என 4 குறுவட்டங்களைச் சேர்ந்த பொது மக்கள் கலந்துகொண்டனர். கூட்டத்துக்கு செய்யாறு கோட்டாட்சியர் அன்னம்மாள் தலைமை வகித்து பொது மக்களிடமிருந்து 1227 மனுக்களைப் பெற்றார்.
இதன் நிறைவு விழாவில் முதியோர் உதவித்தொகை, சாதிச் சான்று, பட்டா மாற்றம், இயற்கை மரண நிவாரணம் என 125 பேருக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. வட்டாட்சியர் சுதாகர், சமூக பாதுகாப்புத் திட்ட அலுவலர் அரிதாஸ், தலைமையிடத்து வட்டாட்சியர் கோமதி, வருவாய் ஆய்வாளர் கோபால் மற்றும் வருவாய்த் துறையினர், விவசாயிகள் கலந்துகொண்டனர்.