வந்தவாசி அருகே காணாமல் போன நரிக்குறவ மூதாட்டி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.
வந்தவாசியை அடுத்த தெள்ளாறு நரிக்குறவ சமுதாயத்தினர் வசிக்கும் பகுதியைச் சேர்ந்தவர் குப்புசாமி மனைவி கிளஞ்சியம்மாள் (80). இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வளையல் வியாபாரம் செய்வதற்காக வீட்டிலிருந்து வெளியே சென்றார். பின்னர் வீடு திரும்பவில்லை.
இந்த நிலையில், ஞாயிற்றுக்கிழமை அந்தப் பகுதி அருகே உள்ள கிணற்றில் கிளஞ்சியம்மாள் சடலமாக கிடந்ததைப் பார்த்த அவ்வழியாகச் சென்றவர்கள் தெள்ளாறு காவல் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து அங்கு சென்ற போலீஸார் மூதாட்டியின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து அவரது உறவினர் மனோகரன் அளித்த புகாரின் பேரில் தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.