கலசப்பாக்கத்தில் உள்ள திருமாமுடீஸ்வரர் கோயிலில் இரண்டு உண்டியல்களை உடைத்து அதில் இருந்த பணத்தையும், அம்மன் தாலிச் சங்கிலியையும் மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கலசப்பாக்கத்தில் பழைமை வாய்ந்த திருமாமுடீஸ்வரர் கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலை திங்கள்கிழமை இரவு வழக்கபோல பூசாரி பூட்டிச் சென்றார். பின்னர் செவ்வாய்க்கிழமை காலை அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் கோயில் வழியாகச் சென்றபோது, கோயிலின் கொடி மரம் அருகே உள்ள நந்தியின் எதிரே உள்ள ஜன்னலை மர்ம நபர்கள் உடைத்து, உள்ளே சென்று, 2 உண்டியல்கûளையும் திறந்து அதில் இருந்த சுமார் 20 ஆயிரம் பணத்தையும், அம்மன் கழுத்தில் இருந்த 2 கிராம் தாலிச் சங்கிலியையும் திருடிச் சென்றது தெரிய வந்தது.
இதுகுறித்து கோயில் அறங்காவலர் குழுத் தலைவர் துரைக்கண்ணு கலசப்பாக்கம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், விரல் ரேகை நிபுணர்கள் வந்து தடயங்களை சேகரித்துச் சென்றனர்.