ரயில்வே மேம்பாலம் கட்டும் பணி நடைபெறுவதால் ஜூன் 19-ஆம் தேதி முதல் திருவண்ணாமலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.ஆர்.சிபி சக்கரவர்த்தி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு: திருவண்ணாமலை-திண்டிவனம் சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறன.
ரயில்வே இருப்புப் பாதைக்கு கிழக்கே பூர்வாங்கப் பணிகள் முடிவுற்றுள்ளன. இந்த நிலையில், இருப்புப் பாதைக்கு மேற்கே வட்டாட்சியர் அலுவலக நுழைவு வாயில் வரை பாலம் அமைப்பதற்கான பூர்வாங்கப் பணிகள் ஜூன் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது.
எனவே, இதனால் ஏற்படும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு வேட்டவலம், கீழ்பென்னாத்தூர், மங்கலம் வழியாக திருவண்ணாமலைக்கு வரும் அனைத்துப் பேருந்துகள், சரக்கு வாகனங்கள், இதர வாகனங்கள் அனைத்தும் அவலூர்பேட்டை சாலை வழியாக திருவண்ணாமலை நகருக்குள் வருவதற்கு அனுமதிக்கப்படும்.
இதேபோல, திருவண்ணாமலையில் இருந்து இதே மார்க்கத்தில் வெளியே செல்லும் பேருந்துகள், சரக்கு வாகனங்கள் போன்றவை வேலூர் சாலை வழியாக தீபம் நகர், வெளிவட்டச் சாலையில் அமைந்துள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வழியாக சென்று சம்பந்தப்பட்ட வழித்தடத்தில் செல்ல வேண்டும்.
திருக்கோவிலூர் மார்கத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு வரும் பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் எடப்பாளையத்தில் இருந்து வெளிவட்டச் சாலையில் இடதுபுறமாக திரும்பி மணலூர்பேட்டை சாலையை அடைந்து, வலதுபுறமாக திரும்பி பழைய அரசு மருத்துவமனை, அக்னி தீர்த்தம் சந்திப்பு, பே கோபுர தெரு வழியாக மத்திய பேருந்து நிலையத்துக்கு வர வேண்டும்.
மத்திய பேருந்து நிலையம் மற்றும் திருவண்ணாமலை நகரில் இருந்து திருக்கோவிலூர் நோக்கிச் செல்லும் பேருந்து உள்பட அனைத்து வகை வாகனங்களும் இதே பாதையில் வெளியே செல்ல வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.