திருவண்ணாமலை மாவட்டம், போளூர் சார் - பதிவாளர் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு போலீஸார் சார் - பதிவாளரிடம் வியாழக்கிழமை ரூ.30 ஆயிரத்தை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
போளூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் சார் - பதிவாளர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகப் பகுதிக்கு வந்த திருவண்ணாமலை ஊழல் தடுப்புப் பிரிவு டிஎஸ்பி சரவணகுமார் தலைமையிலான போலீஸார், காலை 11 முதலே சார் - பதிவாளர் அலுவலக நடவடிக்கைகளை கண்காணித்துள்ளனர்.
மாலை 6 மணிக்கு அலுவலகத்துக்குள் சென்ற ஊழல் தடுப்பு போலீஸார், அங்கு சார்- பதிவாளர், ஊழியர்கள், பத்திரப்பதிவுக்கு வந்தவர்கள் என 20-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடத்தினர். அப்போது, சார் - பதிவாளர் சாந்தகுமாரியிடம் உரிய ஆவணங்கள் இல்லாத ரூ.30 ஆயிரம் கைப்பற்றப்பட்டது. இதையடுத்து, பத்திரப்பதிவுக்கு வந்தவர்களை வெளியே அனுப்பிவிட்டு, சார் - பதிவாளர், ஊழியர்களிடம் ஊழல் தடுப்பு போலீஸார் விசாரணை மேற்கொண்டனர்.