திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயில் பெண் மங்கை சிலையில் ஏற்பட்டிருந்த விரிசலை சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
சிவனின் அக்னி ஸ்தலமான திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோயிலில் அம்மணி அம்மன் கோபுரத்தின் அடித்தளத்தில் பெண் மங்கை சிலைகள் உள்ளன. இவற்றில் ஒரு சிலையில் விரிசல் ஏற்பட்டு இருந்தது சில மாதங்களுக்கு முன்பு கண்டுபிடிக்கப்பட்டது. இந்த விரிசலை சீரமைக்கும் பணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கோயில் இணை ஆணையர் இரா.ஞானசேகர் தலைமையில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் கடுக்காய், சுண்ணாம்பு உள்ளிட்ட பல்வேறு மூலிகைகளைக் கொண்டு தயாரிக்கப்பட்ட கலவை மூலம் விரிசலை அடைத்து, சீரமைத்தனர்.
போதுமான அளவு மூலிகைக் கலவை பயன்படுத்தப்பட்டு விரிசல் சீரமைக்கப்பட்டுள்ளதால், பெண் மங்கை சிலைக்கும், கோபுரத் தூணுக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படாது என்று கோயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.