திருவண்ணாமலை ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் 18-ஆவது ஆண்டு ஆராதனை விழாவையொட்டி, ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தீர்த்த நாராயண பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவண்ணாமலை - செங்கம் சாலையில் உள்ள ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் ஆஸ்ரமத்தில் பகவானின் 18-ஆவது ஆண்டு ஆராதனை விழா சனிக்கிழமை தொடங்கியது. காலை 6.30 மணி முதல் இரவு 8 மணி வரை நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சிகளில் திரளானோர் கலந்து கொண்டனர்.
தீர்த்த நாராயண பூஜை: விழாவின் 2-ஆவது நாளான ஞாயிற்றுக்கிழமை காலை 6.30 முதல் 11 மணி வரை மகன்யாசம், அதிஷ்டானத்தில் மஹாபிஷேகம், அர்ச்சனை, பூஜை, தீபாராதனை உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. காலை 9 மணி முதல் நண்பகல் 12 மணி வரை ஸ்ரீநித்யானந்தகிரி சுவாமிகள் முன்னிலையில் தீர்த்த நாராயண பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, காலை 10.30 மணி முதல் பிற்பகல் ஒரு மணி வரை பக்தர்கள் பஜனை நிகழ்ச்சி, மாலை 4.30 முதல் 6 மணி வரை ஹைதராபாத் சுஜாதா மூர்த்தி குழுவினரின் குச்சிப்புடி நடனம், மாலை 6.30 முதல் இரவு 8 மணி வரை கடலூர் கோபி பாகவதர் குழுவினரின் மஹா பக்த விஜயம், இரவு 8 மணிக்கு கலைமாமணி ஆர்.பிச்சாண்டி குழுவினரின் மங்கள இசையுடன் ஸ்ரீயோகி ராம்சுரத்குமார் வெள்ளி ரத வீதியுலா உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
நிகழ்ச்சிகளில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ஆஸ்ரமத் தலைவரும், நீதியரசருமான டி.எஸ்.அருணாச்சலம், அறங்காவலர்கள் டி.எஸ்.ராமநாதன், மா தேவகி, மதர் விஜயலட்சுமி, பி.ஏ.ஜி.குமரன், ஜி.சுவாமிநாதன், ஜி.ராஜேஸ்வரி, டி.கணபதி சுப்பிரமணியன் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.