திருவண்ணாமலை மாவட்டத்துக்கு உள்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு இலவசப் பேருந்து பயண சலுகை அட்டை வழங்கும் முகாம் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் வரும் 19-ஆம் தேதி முதல் நடைபெற உள்ளதாக மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருவண்ணாமலை மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலகம் வாயிலாக மாற்றுத் திறனாளிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் இலவச பேருந்து பயண சலுகை அட்டை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்துக்கு பரிந்துரை செய்து வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், 2019 - 2020ஆம் ஆண்டுக்கான இலவச பயண சலுகை அட்டை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட உள்ளது.
இதற்காக மார்ச் 19-ஆம் தேதியன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, மார்ச் 21-ஆம் தேதியன்று ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, மார்ச் 22-ஆம் தேதியன்று ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது.
மேலும், மார்ச் 27-ஆம் தேதியன்று திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர், செங்கம், தண்டராம்பட்டு, மார்ச் 28-ஆம் தேதியன்று ஜமுனாமரத்தூர், போளூர், கலசப்பாக்கம், சேத்துப்பட்டு, மார்ச் 29-ஆம் தேதியன்று ஆரணி, வெம்பாக்கம், செய்யாறு, வந்தவாசி ஆகிய வட்டங்களைச் சேர்ந்த உடல் இயக்க குறைபாடுடையோர், காது கேளாதோர், மனவளர்ச்சி குன்றிய மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டோருக்கு மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலக வளாகத்தில் காலை 10 மணி முதல் 12 மணி வரை முகாம் நடைபெறுகிறது. இந்த முகாம்களில் உரிய சான்றுகளுடன் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளார்.