மக்களவைத் தேர்தலையொட்டி, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு வெள்ளிக்கிழமை பயிற்சி அளிக்கப்பட்டது.
வந்தவாசி வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு திருவண்ணாமலை மாவட்ட பிற்பட்டோர், சிறுபான்மையினர் நல அலுவலரும், உதவித் தேர்தல் அலுவலருமான லாவண்யா தலைமை வகித்தார். வந்தவாசி வட்டாட்சியர்கள் அரிக்குமார், சுபாஷ், டிஎஸ்பி தங்கராமன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இதில், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் செயல்பாடுகள், வாக்குச் சாவடி அலுவலர்களுக்கு எப்படி பயிற்சி அளிப்பது உள்ளிட்டவை குறித்து விளக்கி கூறப்பட்டது.
முகாமில் வந்தவாசி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 22 மண்டல தேர்தல் அலுவலர்கள் மற்றும் அவர்களது குழுவினர் பங்கேற்று பயிற்சி பெற்றனர்.
செய்யாறு வருவாய்க் கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற பயிற்சி முகாமுக்கு கோட்டாட்சியர் ரா.அன்னம்மாள் தலைமை வகித்தார். இதில், ஆரணி மக்களவைத் தொகுதி தேர்தல் அலுவலரும், திருவண்ணாமலை மாவட்ட வருவாய் அலுவலருமான பொ.ரத்தினசாமி கலந்து கொண்டு, மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளித்தார்.
இதேபோல, போளூரில் போளூர் சட்டப் பேரவைத் தொகுதி உதவித் தேர்தல் அலுவலரும், மாவட்ட வட்ட வழங்கல் அலுவலருமான கே.அரிதாஸ் தலைமையிலும், செங்கத்தில் உதவித் தேர்தல் அலுவலர் வில்சன்ராஜசேகர் தலைமையிலும் மண்டல தேர்தல் அலுவலர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.