வந்தவாசி அருகே மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்த மூதாட்டி உயிரிழந்தார்.
வந்தவாசியை அடுத்த கீழ்நமண்டி கிராமத்தைச் சேர்ந்தவர் சுப்பன் (75). இவரது மனைவி அம்மாச்சி (70). இவர்களுக்கு 4 மகள்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணமாகிவிட்டது. இந்த நிலையில், அம்மாச்சி முதியோர் உதவித்தொகை பெறுவதற்காக கீழ்நமண்டி கிராமத்தில் வசிக்கும் இளைய மருமகன் ரத்தினத்துடன் மொபெட்டில் சி.ம.புதூரில் உள்ள வங்கிக்கு புதன்கிழமை பிற்பகல் சென்று கொண்டிருந்தார். செல்லும் வழியில் அம்மாச்சி மொபெட்டிலிருந்து தவறி கீழே விழுந்தார்.
இதில் பலத்த காயமடைந்து வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட அம்மாச்சி இறந்தார். இதுகுறித்து சுப்பன் அளித்த புகாரின்பேரில், தெள்ளாறு போலீஸார் வியாழக்கிழமை வழக்குப் பதிந்தனர்.