திருவண்ணாமலை மாவட்டம், ஆரணியில் உரிய ஆவணங்களின்றி காரில் எடுத்துச் செல்லப்பட்ட ரூ.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் சனிக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூரை அடுத்த உத்ராலி பகுதியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார் (32). இவரும், இவரது மனைவி நந்தினி, தந்தை பசுவராஜ், தாய் சுமங்களா, மாமியார் விஷ்மாதாஸ் ஆகியோரும் திருவண்ணாமலை ஸ்ரீஅருணாசலேஸ்வரர் கோயிலுக்கு சனிக்கிழமை வந்தனர்.
பிரவீன்குமார் பெங்களூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர், வீட்டுமனை, நிலம் வாங்குவதற்காக வைத்திருந்த ரூ.20 லட்சத்தை காரில் எடுத்து வந்துள்ளார்.
கோயிலில் தரிசனம் செய்துவிட்டு காரில் ஆரணி வழியாக காஞ்சிபுரம் சென்றுகொண்டிருந்தனர்.
ஆரணியை அடுத்த மலையாம்பட்டில் தேர்தல் பறக்கும் படை அலுவலர் கீதா தலைமையிலான அலுவலர்கள், போலீஸார் காரில் சோதனை செய்தனர். அப்போது, காரில் இருந்த ரூ.20 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
மேலும், இதுகுறித்து வருமான வரித் துறையினருக்கும், சென்னையில் உள்ள தேர்தல் அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கீதா தெரிவித்தார்.