செங்கம் ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் 392 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
செங்கத்தை அடுத்த செ.நாச்சிப்பட்டு ஸ்ரீசக்தி பாலிடெக்னிக் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து முடித்த மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள், மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் இடம் பிடித்த 50 மாணவர்களுக்கு ரூ. ஒரு லட்சத்து 54 ஆயிரம் ரொக்கப்பரிசு, கல்லூரியில் நடைபெற்ற பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பை, பேராசிரியர்களுக்கு ஊக்கப்பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரித் தலைவர் எஸ்.வெங்கடாசலபதி தலைமை வகித்தார். நிர்வாகக் குழு உறுப்பினர்கள் நா.பாலகிருஷ்ணன், அம்பிகாபதி, ரேவதிசுந்தரமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் பரிமளாஜெயந்தி வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக தூத்துக்குடி காவலர் பயிற்சிப் பள்ளி முதல்வர் ராமகிருஷ்ணன் கலந்துகொண்டு 392 மாணவர்களுக்கு பணி நியமன ஆணைகள், போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பை, பேராசிரியர்களுக்கு ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கினார். மேலும், மாணவர்களுக்கு அறிவுரைகளை வழங்கி அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் திருவண்ணாமலை மனவளக் கலை மைய பொறுப்பாளர் முரளி, முன்னாள் பேரூராட்சி துணைத் தலைவர் பார்த்தசாரதி, எச்.பி. சமையல் எரிவாயு விநியோக நிறுவன் உரிமையாளர் அசோகன் மற்றும் கல்லூரிப் பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். விரிவுரையாளர் ரூபி நன்றி கூறினார்.