கலசப்பாக்கம் அருகே இரு குழந்தைகளைக் கொன்று தாய் தற்கொலை

திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக, தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, பெண் தற்கொலை செய்துகொண்டார்.


திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் அருகே ஞாயிற்றுக்கிழமை குடும்பப் பிரச்னை காரணமாக, தனது இரு குழந்தைகளை கொன்றுவிட்டு, பெண் தற்கொலை செய்துகொண்டார்.
 கலசப்பாக்கம் அருகேயுள்ள சிறுவள்ளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயசங்கர் (35), சமையல் தொழிலாளி. இவருக்கும் அதே கிராமத்தைச் சேர்ந்த செவ்வந்தி (27) என்பவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு  திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு அனுஸ்டி(5), தனுஸ்டி (2),  ஆகிய இரு பெண் குழந்தைகள் உள்ளனர். 
ஜெய்சங்கருக்கு மதுப் பழக்கம் இருந்ததாம். இதனால் அவர் குடும்ப செலவுக்கு பணம் கொடுக்காமல்,  மது அருந்தி வந்து அடிக்கடி மனைவி செவ்வந்தியிடம் தகராறு செய்து வந்தாராம். இதேபோன்று கடந்த 10 நாள்களுக்கு முன்பு ஜெயசங்கர் மது அருந்தி வந்து செவ்வந்தியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதனால், செவ்வந்தி குழந்தைகளை அழைத்துக் கொண்டு அதே ஊரில் உள்ள தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
 இந்த நிலையில், அமாவாசையை முன்னிட்டு சனிக்கிழமை செவ்வந்தியின் தாய் அம்மணியம்மாள், கோயிலுக்குச் சென்றுவிட்டார். வீட்டில் செவ்வந்தி தனது குழந்தைகளுடன் இருந்துள்ளார்.  அம்மணியம்மாள் சனிக்கிழமை இரவு கோயிலில் தங்கிவிட்டு, ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வீட்டுக்கு வந்து பார்த்தபோது  2 பெண் குழந்தைகள் கழுத்து நெரிக்கப்பட்டு இறந்து கிடந்தன. மேலும், செவ்வந்தி தூக்கில் சடலமாகத் தொங்கினார். அவர், குடும்பப் பிரச்னை காரணமாக, குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்திருக்கலாம் எனத் தெரிகிறது.
இதனிடையே, தனது மகள், பேத்திகள் இறப்பில் சந்தேகம் உள்ளதாக அம்மணியம்மாள் கடலாடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். போலீஸார்  வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். திருவண்ணாமலை கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.  செவ்வந்தி மற்றும் 2 பெண் குழந்தைகளின் சடலங்கள் உடல்கூறு ஆய்வுக்காக  திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com