திருவண்ணாமலையை அடுத்த வாணியந்தாங்கல் கிராம ஏரிக்கரையில் அமைந்துள்ள காளியம்மன் கோயிலில், மழை வேண்டி சனிக்கிழமை இரவு மிளகாய் யாகம் நடைபெற்றது.
இந்தக் கோயிலில் ஆண்டுக்கு ஒருமுறை சித்திரை மாதத்தில் மிளகாய் யாகம் நடைபெறும்.
அதன்படி, அமாவாசை தினமான சனிக்கிழமை இரவு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக-ஆராதனை செய்யப்பட்டது. தொடர்ந்து, 108 மூலிகைகளைக் கொண்டு அபிஷேகமும், 108 பால்குட ஊர்வலமும் நடைபெற்றது.
இரவு 7 மணிக்கு கணபதி ஹோமத்துடன் மழை வேண்டி பிரத்யங்கரா தேவிக்கு மிளகாய் யாகம் நடைபெற்றது.
200 கிலோ மிளகாய், நெய், வெண்கடுகு, வால்மிளகு, எலுமிச்சை உள்ளிட்ட 11 வகையான பொருள்களைக் கொண்டு இந்த யாகம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.