வந்தவாசி அருகே தேர்தல் பறக்கும் படையினர் மேற்கொண்ட வாகன சோதனையில் 3000 ஜெலட்டின் குச்சிகள், 2600 டெட்டனேட்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
வந்தவாசி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட தேர்தல் பறக்கும் படை அலுவலர் ஞானசுந்தரம் தலைமையிலான குழுவினர் வந்தவாசி-திண்டிவனம் சாலை தெள்ளாறு வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே புதன்கிழமை காலை வாகன சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, திண்டிவனத்துக்குச் சென்ற மினி லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
அந்த வாகனத்தில் 3000 ஜெலட்டின் குச்சிகள், 2600 டெட்டனேட்டர்கள் ஆகியவை அனுமதியின்றி எடுத்துச் செல்வது தெரிய வந்தது.
இதையடுத்து, வெடிபொருள்கள், மினி லாரியை பறக்கும் படையினர் பறிமுதல் செய்து தெள்ளாறு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.
தெள்ளாறு போலீஸார் வழக்குப் பதிந்து மினி லாரி ஓட்டுநரான கண்டவரட்டி கிராமத்தைச் சேர்ந்த முரளியை (22) கைது செய்தனர்.
திண்டிவனம் பகுதியில் கிணறு தோண்டுவதற்காக வெடிபொருள்கள் கொண்டு செல்லப்பட்டதாக போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்தது.