செங்கம் நகரில் பழுதடைந்து, குண்டும், குழியுமாகக் காட்சியளிக்கும் சிமென்ட் சாலைகளால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
செங்கம் பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. அனைத்து வார்டுகளிலும் பெரும்பாலான இடங்களில் சிமென்ட் சாலைகள் போடப்பட்டுள்ளன. சாலை போடப்பட்டுள்ள பகுதியில் குடியிருப்பவர்கள் அவர்களது வீட்டில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்காக வீட்டின் முன் பந்தல் அமைப்பதற்கு சிமென்ட் சாலையை தோண்டி பள்ளம் ஏற்படுத்தி விடுகின்றனர். பின்னர் அந்த பள்ளத்தை முழுமையாக சரிசெய்வதில்லை. அதை சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் கண்டுகொள்வதில்லை.
மேலும், குடிநீர் குழாய் பதிப்பதற்கு தோண்டப்படும் பள்ளங்களும் சரிசெய்யப்படுவதில்லை. இவ்வாறு ஏற்படுத்தப்பட்ட பள்ளங்கள் நகரில் பல்வேறு பகுதிகளில் ஓடை போல காட்சியளிக்கின்றன.
இதனால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
குடிநீர் குழாய் பதிப்பதற்கு அனுமதி வழங்கும் பேரூராட்சி நிர்வாகம் தோண்டிய பள்ளத்தை முழுமையாக சரிசெய்துள்ளார்களா என்று கண்காணிப்பதில்லை.
கடந்த 20-ஆம் தேதி செங்கத்தில் தேர்த் திருவிழா நடைபெற்றது. அப்போது தேர் செல்லும் பகுதியான பெருமாள் கோவில் தெரு, இராஜ வீதி, மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் மட்டும் அவர அவசரமாக சிமென்ட் சாலையில் இருந்த பள்ளங்களை சிமென்ட் ஜல்லி கொண்டு சரிசெய்தனர்.
ஆனால், பொதுமக்கள் சாலையை சரிசெய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தால், பேரூராட்சியில் நிர்வாக அதிகாரி இல்லை. நிர்வாக அதிகாரி இருந்தால், பணம் இல்லை என்று பதிலளித்து பொதுமக்களின் கோரிக்கையை தட்டிக் கழித்துவிடுகின்றனர்.
இதனால், மாவட்ட நிர்வாகம் தலையிட்டு பழுதடைந்த சிமென்ட் சாலைகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும், செங்கம் நகர மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றுவதற்காக நிரந்தரமாக செயல் அலுவலரை நியமிக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.