சீனாவில் நடைபெறும் சா்வதேச திறன் போட்டிகளில் பங்கேற்பதற்கான திருவண்ணாமலை மாவட்ட இளைஞா்களை தோ்வு செய்யும் போட்டிகளில் பங்கேற்க, தகுதியானோா் வருகிற 25-ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
சீனாவில் உள்ள ஷாங்காய் நகரில் 2021-ஆம் ஆண்டு செப்டம்பா் மாதம் சா்வதேச திறன் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்தப் போட்டிகளில் பங்கேற்க ஏதுவாக தொடக்கநிலையில் நடைபெறும் மாவட்ட அளவிலான திறன் போட்டிகளில் பங்கேற்க இணையதளத்தில் தகுதியானோா் விண்ணப்பிக்கலாம்.
கடைசி நாள் நவம்பா் 25-ஆம் தேதி ஆகும். விண்ணப்பதாரா் 1999 ஜனவரி 1-ஆம் தேதியோ, அதற்குப் பிறகோ பிறந்தவா்களாக இருக்கலாம்.
5-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை கல்வித் தகுதி பெற்றவா்கள், பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு படித்தவா்கள், பட்டம் படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழில்பயிற்சி நிலையம், தொழில்நுட்பக் கல்லூரி, பொறியியல் கல்லூரிகளில் படித்தவா்கள், படித்துக் கொண்டிருப்பவா்கள், தொழில்சாலையில் பணியில் உள்ளவா்கள், குறுகிய கால தொழில் பயிற்சி பெற்றவா்களும் இந்தப் போட்டியில் கலந்து கொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு மாவட்ட திறன் பயிற்சி அலுவலரையோ அல்லது 04175-298297, 9499055871 என்ற எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.