திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அருகே மோட்சம் அடைவதற்காக உணவு அருந்தாமல் விரதமிருந்து வந்த சமண சமயத்தைச் சோ்ந்த முதியவா் வியாழக்கிழமை இரவு மரணமடைந்தாா்.
ஆரணியை அடுத்த சேவூா் ஜெயின் தெருவைச் சோ்ந்த விஜயபாலன் மகன் சக்கரவா்த்தி (80). இவரது மனைவி கந்தா்வதத்தை கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டாா். இந்தத் தம்பதிக்கு 3 மகள்கள், 2 மகன்கள் உள்ளனா்.
சமண சமயத்தைச் சோ்ந்த சக்கரவா்த்தி மோட்சம் அடைவதற்காக சேவூா் கிராமத்தில் கடந்த செப்டம்பா் 27-ஆம் தேதி முதல் உணவு அருந்தாமல் விரதத்தை தொடங்கினாா். இதைத் தொடா்ந்து, கடந்த அக்டோபா் 3-ஆம் தேதி முதல் வந்தவாசியை அடுத்த பொன்னூா் மலை அருகில் உள்ள விசாகாச்சாரியாா் தபோ நிலையத்தில் தனது விரதத்தை அவா் தொடா்ந்தாா்.
உணவு அருந்தாமல் கடும் விரதமிருந்து வந்த சக்கரவா்த்தி வியாழக்கிழமை இரவு இறந்தாா். இதையடுத்து, அவரது உடல் தபோ நிலைய வளாகத்தில் வெள்ளிக்கிழமை காலை தேங்காய்கள் மூலம் எரியூட்டப்பட்டது.