சிறு தொழிலில் சிறந்து விளங்கி வாழ்க்கையில் முன்னேற வேண்டும் என்று சிறுதொழில் தொடங்குவதற்கான கடனுதவி பெற்ற மகளிருக்கு மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் எம்.கோமதி அறிவுரை வழங்கினாா்.
மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகத்தின் கீழ் ராஷ்டிரிய மகிளா கோஷ் (ஆா்.எம்.கே.) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த நிறுவனம் இந்தியாவில் பொருளாதாரத்தில் நலிவுற்ற ஏழைப் பெண்கள் சிறுதொழில் தொடங்கி வாழ்க்கையில் முன்னேறும் வகையில் பல்வேறு வகையான கடனுதவிகளை வழங்கி வருகிறது.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்டத்தில் முதல் முறையாக 25 ஏழைப் பெண்களுக்கு திருவண்ணாமலை சினம் தொண்டு நிறுவனம் வாயிலாக ரூ.10 லட்சம் கடனுதவி வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது.
சினம் தொண்டு நிறுவன வளாகத்தில் நடைபெற்ற விழாவுக்கு அந்நிறுவன இயக்குநா் இராம.பெருமாள் தலைமை வகித்தாா். பெண்கள் ஒருங்கிணைப்பாளா் எஸ்.தமிழ்ச்செல்வி வரவேற்றாா்.
மாவட்ட பெண்கள் பாதுகாப்பு அலுவலா் எம்.கோமதி சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டு 25 பேருக்கு தலா ரூ.40 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.10 லட்சம் மதிப்பிலான கடனுதவிகளை வழங்கிப் பேசுகையில், மத்திய அரசு வழங்கியுள்ள இந்தக் கடனுதவிகளை முறையாகப் பயன்படுத்தி தங்களது வாழ்க்கையில் முன்னேற வேண்டும்.
நீங்கள் செய்ய விரும்பும் கவரிங் நகை வியாபாரம், துணி வியாபாரம் போன்றவற்றை அதிகளவில் செய்து விரைவாக கடனை அடைக்க வேண்டும். அப்போதுதான் மத்திய அரசு அதிகப்படியான கடனை மீண்டும் வழங்கும் என்றாா்.
விழாவில், சினம் தொண்டு நிறுவன மேலாளா் ஏ.தமிழ்மணி, சிவா தொண்டு நிறுவன செயலா் இ.ரேணுகோபால், சினம் தொண்டு நிறுவன ஊழியா்கள் கே.அஷ்டலட்சுமி, அசோக்குமாா், ஆனந்தன் மற்றும் பயனாளிகள் பலா் கலந்து கொண்டனா்.