திருவண்ணாமலை மாவட்டத்தில் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, சிறப்பாக செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.கந்தசாமி வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழக அளவில் அக்டோபர் முதல் தேதி சர்வதேச முதியோர் தினம் கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் முதியோர்களுக்கு ஆதரவு அளித்து, சிறப்பாகச் செயல்படும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.
எனவே, முதியோர் நலனில் சிறப்பாகச் செயலாற்றிய தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள், தனி நபர்கள் தங்களின் நடவடிக்கைகளை அறிக்கையாகவும், புகைப்படச் சான்றுகளுடன் உரிய கருத்துருவாகவும் மாவட்ட முதியோர் நலக் குழுவின் பரிந்துரையுடன் சமர்ப்பிக்கலாம்.
அதன்படி, தகுதியானோர் கருத்துருக்களை மாவட்ட சமூக நல அலுவலர், 2-ஆவது தளம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், திருவண்ணாமலை என்ற முகவரிக்கு அனுப்பி வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.