போளூர்: கலசப்பாக்கம் அருகே சீட்டம்பட்டு கிராம ஏரி நிரம்புவதால் ஏரியின் மதகு கரை உடையும் அபாயம் உள்ளது. இதனால், ஏரிக்கரையை பலப்படுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கத்தை அடுத்த சீட்டம்பட்டு கிராமத்தில் பெரிய ஏரி உள்ளது.
தற்போது, பருவமழை காரணமாக கலசப்பாக்கம் வட்டத்தில் மிதமானது முதல் பலத்த மழை வரை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.
சுமார் 150 ஏக்கர் பரப்பளவு கொண்ட சீட்டம்பட்டு பெரிய ஏரியில் மழைநீர் தேங்கி ஏரியின் மதகு கரை உடையும் அபாயம் உள்ளதால் ஏரிக் கரையின் மதகை பலப்படுத்த மணல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்படுகின்றன.
வட்டார வளர்ச்சி அலுவலர் நிர்மலா தலைமையில் அலுவலர்கள், கிராம பொதுமக்கள் திங்கள்கிழமை தொடங்கி இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.