செங்கம் அருகே உள்ள கிராமங்களில் கடந்த சில நாள்களாக பரவி வரும் மர்மக் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 50-க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
செங்கத்தை அடுத்த புதுப்பட்டு, ஆலப்புத்தூர், தோக்கவாடி உள்ளிட்ட கிராமங்களில் கடந்த சில நாள்களாக பெய்த தொடர் மழை காரணமாக, அந்தப் பகுதிகளில் மழைநீர், கழிவுநீர் தேங்கி கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி வருகின்றன.
இதனால், மேற்கூறிய கிராமங்களில் உள்ள சுமார் 50-க்கும் மேற்பட்டோருக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் செங்கம் அரசு மருத்துவமனை, பரமனந்தல் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
எனவே, காய்ச்சல் மேலும் பொதுமக்களுக்கு பரவாமல் தடுக்கும் வகையில், கிராமங்களில் தேங்கியுள்ள கழிவுநீரை வெளியேற்றவும், கொசுப் புகை அடிக்கவும், குடிநீர்த் தொட்டிகளை சுத்தம் செய்து கிருமி நாசினி பொடி கலந்த குடிநீர் விநியோகிக்கவும், மருத்துவ முகாம் அமைக்கவும் சுகாதாரத் துறை, செங்கம்
பேரூராட்சி, கிராம ஊராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.