போளூர் பகுதியில் 10 பைக்குகளை திருடி விற்றதாக இளைஞரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
போளூரை அடுத்த வசூர் ஊராட்சியில் செங்கம் சாலையில் போளூர் போலீஸார் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது, அந்த வழியாக பைக்கில் வந்த இளைஞரை நிறுத்தி விசாரித்தபோது, அவர் ஓட்டி வந்த வாகனத்துக்கு உரிய ஆவணங்கள் இல்லை என்பது தெரியவந்தது.
மேலும், அந்த இளைஞர் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்துள்ளார்.
இதையடுத்து, அவரை போளூர் காவல் நிலையத்துக்கு கொண்டு சென்று விசாரித்தபோது, வேலூர் மாவட்டம், வாணியம்பாடி வட்டம், துரிஞ்சிகுப்பம் வெள்ளைகுட்டை பகுதியைச் சேர்ந்த பச்சையப்பன் மகன் சங்கர் (27) என்பதும், போளூர் பகுதியில் 10 பைக்குகளைத் திருடி ஜமுனாமரத்தூர் பகுதியில் பலரிடம் விற்றதும் தெரியவந்தது.
இதையடுத்து, போளூர் டி.எஸ்.பி. குணசேகரன், காவல் ஆய்வாளர் (பொ) நந்தினிதேவி, சிறப்பு காவல் ஆய்வாளர்கள் குபேந்திரன், சந்திரசேகரன், ரகு, ரவி மற்றும் போலீஸார், சங்கர் அளித்த தகவலின்பேரில், அவர் விற்பனை செய்த 10 பைக்குகளையும் பறிமுதல் செய்தனர். மேலும், அவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.