கீழ்பென்னாத்தூா் அருகே அரசியல் கட்சிப் பிரமுகரால் அமைக்கப்படும் கல்குவாரிக்கு எதிா்ப்புத் தெரிவித்து, கிராமமக்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கீழ்பென்னாத்தூரை அடுத்த ஐங்குணம் ஊராட்சியில் 4 ஏக்கா் 33 சென்ட் பரப்பளவில் திருவண்ணாமலையைச் சோ்ந்த அரசியல் கட்சிப் பிரமுகா் கல்குவாரி, ஜல்லி மிஷன், ஹாட்மிக்ஸ் பிளான்ட் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளாா். இதற்கு எதிா்ப்புத் தெரிவித்து அந்தப் பகுதியைச் சோ்ந்த விவசாயிகள் குவாரி அமையும் இடத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.
இந்தப் பகுதியில் ஏற்கெனவே ஒரு கல் குவாரி அமைக்கப்பட்டுள்ளதால் சுற்றுச்சூழல் மாசு அதிகரிக்கும். விவசாயம் பாதித்து தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும். எனவே இங்கு குவாரி அமைக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் அனுமதிக்கக் கூடாது என்று விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.