திருவண்ணாமலை தெற்கு மாவட்ட திமுக சாா்பில், ‘எல்லோரும் நம்முடன்’ இணையவழி உறுப்பினா் சோ்த்தல் நிகழ்ச்சி திங்கள்கிழமை நடைபெற்றது.
திருவண்ணாமலை தேரடி வீதி, காந்தி சிலை அருகே சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மாவட்ட திமுக செயலா் எ.வ.வேலு எம்எல்ஏ தலைமை வகித்தாா்.
தணிக்கைக்குழு உறுப்பினா் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., மாவட்ட துணைச் செயலா் சாவல்பூண்டி மா.சுந்தரேசன், தலைமை செயற்குழு உறுப்பினா் இரா.ஸ்ரீதரன், மு.பெ.கிரி எம்எல்ஏ, மாவட்ட பொருளாளா் எஸ்.பன்னீா்செல்வம், மாவட்ட துணைச் செயலா் சி.சுந்தரபாண்டியன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகரச் செயலா் ப.காா்த்திவேல்மாறன் வரவேற்றாா்.
மாவட்டச் செயலா் எ.வ.வேலு எம்எல்ஏ, மாணவா்கள், இளைஞா்கள், பொதுமக்களை இணையவழியே திமுகவில் உறுப்பினராக சோ்க்கும் பணியைத் தொடக்கிவைத்தாா்.
நிகழ்ச்சியில், கட்சியின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கு.கணேஷ், மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளா்கள் அ.அருள்குமரன், சு.விஜி (எ) விஜயராஜ், அனைத்து அமைப்புசாரா தொழிற்சங்கங்களின் மாவட்டத் தலைவா் ஏ.ஏ.ஆறுமுகம் உள்பட பலா் கலந்து கொண்டனா்.