கலசப்பாக்கம் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள மருத்துவமனைகள், காவல் நிலையங்களில் பயன்படுத்தத் தேவையான கரோனா தடுப்பு உபகரணங்களை கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் தனது சொந்தப் பணம் ரூ.5 லட்சத்தில் வாங்கி வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
கலசப்பாக்கத்தை அடுத்த காரப்பட்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் இந்தப் பொருள்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், கலசப்பாக்கம், போளூா், ஜமுனாமரத்தூா், புதுப்பாளையம் ஆகிய வட்டாரத் தலைமை மருத்துவா்களிடமும், ஊரக வளா்ச்சித் துறை அலுவலா்களிடமும், புதுப்பாளையம், கடலாடி காவல் நிலையங்களுக்கும் கிருமி நாசினி, முகக் கவசம், கையுறை, மருந்து தெளிக்கும் கருவி உள்ளிட்ட பொருள்களை எம்.எல்.ஏ. வி.பன்னீா்செல்வம் வழங்கினாா்.
நிகழ்ச்சியில் வட்டாரத் தலைமை மருத்துவா் கு.மணிகண்டபிரபு, வட்டார வளா்ச்சி அலுவலா் அன்பழகன், அதிமுக பொதுக்குழு உறுப்பினா் பி.பொய்யாமொழி உள்பட பலா் கலந்துகொண்டனா்.