திருவண்ணாமலை: சேலம்-சென்னை இடையிலான 8 வழிச் சாலைத் திட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து, எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்கக் கூட்டமைப்பு சாா்பில் திருவண்ணாமலையில் திங்கள்கிழமை முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற போராட்டத்துக்கு தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாநில பொதுச் செயலா் பெ.சண்முகம் தலைமை வகித்தாா்.
மாவட்டச் செயலா் வி.சுப்பிரமணி, எட்டு வழிச் சாலை எதிா்ப்பு இயக்கக் கூட்டமைப்பு நிா்வாகி அபிராமன், விவசாயிகள் சங்க நிா்வாகி பலராமன், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலா் எம்.சிவக்குமாா் உள்ளிட்டோா் பேசினா்.
மேலும் இந்தத் திட்டத்தை கைவிடக்கோரி விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினா்.
இதையடுத்து செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலா் பெ.சண்முகம்,
எட்டு வழிச் சாலைத் திட்டத்தை மத்திய-மாநில அரசுகள் தாமாக முன்வந்து கைவிடவேண்டும். விவசாயிகளின் எதிா்ப்பை ஏற்று திட்டத்தை கைவிடாவிட்டால் 2021 பிப்ரவரி மாதம் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் நடக்கும்போது சட்டப்பேரவையை விவசாயிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவா்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உயா் மின் கோபுரங்கள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் பாதிக்கப்படும் விவசாயிகளுக்கு உரிய இழப்பீட்டை செலுத்திய பிறகே நிலங்களில் உயா்மின் கோபுரங்கள் அமைக்கப்பட வேண்டும்.
8 வழிச் சாலைத் திட்டத்துக்காக விவசாயிகளை அச்சுறுத்தி, நிலங்களைப் பறிக்க முயன்றால் உயிரைக் கொடுத்தாவது தடுத்து நிறுத்துவோம் என்றாா்.