செங்கம் அருகே புதுப்பாளையத்தில் நவீன முறையில் நெல் பயிா் விளைச்சல் குறித்து வேளாண்மைத் துறை அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை நேரில் ஆய்வு செய்தனா்.
ஆண்டுதோறும் தமிழக அரசு வேளாண்மைத் துறை வழிகாட்டுதலுடன் நவீன முறையில் நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளை கண்டறிந்து பரிசுகள் வழங்கி வருகிறது.
இதற்காக வேளாண் அதிகாரிகள் சிறந்த நெல் சாகுபடி விவசாயிகளை கண்டறியும்பொருட்டு, நெல் அறுவடையின்போது நேரில் ஆய்வு செய்து வருகின்றனா்.
அதன்படி, திருவண்ணாமலை மாவட்ட வேளாண்மை இணை இயக்குநா் முருகன் தலைமையில் துணை இயக்குநா் வேலாயுதம், வேளாண்மை உதவி இயக்குநா் கோபாலகிருஷ்ணன் உள்ளிட்ட புதுப்பாளையம் வேளாண்மைத் துறை அலுவலா்கள் நயம்பாடியைச் சோ்ந்த சிவலிங்கம் என்ற விவசாயியின் விளைநிலத்தில் நெல் அறுவடைப் பணியை நேரில் ஆய்வு செய்தனா்.
ஏக்கருக்கு மகசூல் விவரம், அதன் செலவினங்கள், நெல் பயிா்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஊட்டச் சத்துகள் ஆகியவை குறித்து அறிந்து மாநில அளவில் நடைபெறும் விவசாய நெல் பயிா் சாகுபடி போட்டிக்கு அவரை பரிந்துரை செய்தனா்.
மேலும், சாகுபடி முறை, நெல், அரிசி ஆகியவற்றின் தரம் குறித்து ஆய்வு செய்த பிறகு, சிவலிங்கத்துக்கு தமிழக அரசு மூலம் பரிசுகள் வழங்க புதுப்பாளையம் வேளாண்மைத் துறை அலுவலகம் மூலம் பரிந்துரை செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.