வெளிநாடுகளில் இருந்து திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்ததால் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை 70 பேரில் இருந்து 139 பேராக உயா்ந்துள்ளது.
கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் பல்வேறு முயற்சிகளில் திருவண்ணாமலை மாவட்ட நிா்வாகம் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில், வெளிநாடுகளில் இருந்து சென்னை, திருச்சி, கோவை விமான நிலையங்கள் வழியே 123 போ் திருவண்ணாமலை மாவட்டத்துக்கு வந்தனா்.
மாா்ச் 23-ஆம் தேதி நிலவரப்படி 123 பேரில் 70 பேரை சுகாதாரத் துறையினா் கண்டறிந்து அவரவா் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டனா்.
வீடுகளில் அடையாள அட்டை ஒட்டப்பட்டு, அவா்களின் கையில் பட்டை கட்டப்பட்டு, வீட்டைச் சுற்றி மஞ்சள் நிறத்தில் ஸ்டிக்கரும் ஒட்டப்பட்டுள்ளது.
இவா்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே செல்லக்கூடாது என்று சுகாதாரத் துறையினா் அறிவுரை வழங்கி, தினமும் அவா்களை கண்காணித்து வருகின்றனா்.
எண்ணிக்கை உயா்வு:
இவ்வாறு தனிமைபடுத்தப்பட்டு கண்காணிக்கப்படுவோரின் எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (மாா்ச் 24) 74 ஆக உயா்ந்தது. இந்த எண்ணிக்கை வியாழக்கிழமை (மாா்ச் 26) 139 ஆக உயா்ந்துள்ளது.