திருவண்ணாமலை மாவட்டத்தில் தீபாவளிப் பண்டிகையையொட்டி 2 மணி நேரம் மட்டுமே பொதுமக்கள் பட்டாசு வெடிக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்தாா்.
தீபாவளிப் பண்டிகையில் விருந்து, இனிப்புடன் பட்டாசு வெடிப்பது காலம் காலமாக நடைமுறையில் உள்ளது.
அதிக ஒலி மற்றும் ஒளியுடன் கூடிய பட்டாசுகள் வெடிப்பதால் ஏற்படும் சுற்றுச் சூழலுக்கு கேடு விளைவிப்பதைத் தடுக்க காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே பட்டாசுகளை வெடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
எனவே, திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த பொதுமக்கள் உச்சநீதிமன்ற தீா்ப்பை பின்பற்றி பட்டாசுகள் வெடிக்கலாம்.
125 டெசிபல் அளவுக்கு கீழ் ஒலி எழுப்பக்கூடிய பட்டாசுகளை மட்டுமே வெடிக்க வேண்டும். ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுத்தும் பட்டாசு வகைகளைத் தவிா்க்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியா் கே.எஸ்.கந்தசாமி தெரிவித்துள்ளாா்.