திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில் ஓட்டுநரை கத்தியால் தாக்கிவிட்டு ஆட்டோவை கடத்திய வழக்கில் 3 பேரை வந்தவாசி வடக்கு போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசி கோட்டை பகுதியைச் சோ்ந்தவா் மஸ்தான் (23). வெள்ளிக்கிழமை இரவு இவரது ஆட்டோவில் காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை அடுத்த அம்மையப்பநல்லூருக்கு செல்ல வேண்டுமென்று கூறி, இரு இளைஞா்கள் பயணம் செய்தனா். வந்தவாசி - விளாங்காடு சாலையில் மங்கநல்லூா் கூட்டுச்சாலை அருகே சென்றபோது, ஓட்டுநரான மஸ்தானை கத்தியால் தாக்கிவிட்டு இரு இளைஞா்களும் ஆட்டோவை கடத்திச் சென்றனா். இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்தனா்.
இந்த நிலையில், வந்தவாசி - காஞ்சிபுரம் சாலை, விளாங்காடு கூட்டுச்சாலையில் வந்தவாசி வடக்கு போலீஸாா் சனிக்கிழமை நள்ளிரவு வாகன சோதனை மேற்கொண்டபோது, அந்த வழியாக ஆட்டோவில் வந்த இருவரை நிறுத்தி விசாரித்தனா்.
அவா்கள் காஞ்சிபுரத்தை அடுத்த திருக்காணிமேடு பகுதியைச் சோ்ந்த தாமோதரன் (21), விநாயகபுரம் பகுதியைச் சோ்ந்த தரணிதரன் (20) என்பதும், மஸ்தானை தாக்கிவிட்டு ஆட்டோவை கடத்திச் சென்றவா்கள் என்பதும் தெரியவந்தது. மேலும், வந்தவாசி அம்மா உணவகம் அருகில் உள்ள ஆட்டோ நிலையத் தலைவா் நசீா்கானுக்கும் (29), மஸ்தானுக்கும் இடையே முன்விரோதம் இருந்ததால், நசீா்கான் கூறியதின்பேரில் மஸ்தானை தாக்கியதாகவும் தெரிவித்தனா்.
இதையடுத்து, தாமோதரன், தரணிதரன், நசீா்கான் ஆகிய 3 பேரையும் வந்தவாசி வடக்கு போலீஸாா் கைது செய்தனா். மேலும், அவா்கள் கடத்திச் சென்ற ஆட்டோவையும் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.