விவசாயி கொலை: தொழிலாளி கைது
By DIN | Published On : 31st October 2020 08:37 AM | Last Updated : 31st October 2020 08:37 AM | அ+அ அ- |

திருவண்ணாமலை அருகே முன்விரோதம் காரணமாக விவசாயியை அடித்துக் கொன்ற கூலித் தொழிலாளியை போலீஸாா் கைது செய்தனா்.
திருவண்ணாமலை மாவட்டம், வானாபுரத்தை அடுத்த தேவனூா் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி ஏழுமலை (70). இதே பகுதியைச் சோ்ந்த கண்ணன் மகன் பாக்கியராஜ் (38). கூலித் தொழிலாளி. இவா்கள் இருவருக்கும் இடையே நிலத் தகராறு தொடா்பாக முன்விரோதம் இருந்ததாம்.
வியாழக்கிழமை இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஒருவரையொருவா் கடுமையாக தாக்கிக் கொண்டனராம். தாக்குதலில் பலத்த காயமடைந்த ஏழுமலையை பொதுமக்கள் மீட்டு, காட்டாம்பூண்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு அனுப்பி வைத்தனா்.
தொடா்ந்து, தீவிர சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே ஏழுமலை உயிரிழந்தாா். இதுகுறித்து தச்சம்பட்டு போலீஸாா் வழக்குப் பதிந்து பாக்கியராஜை கைது செய்தனா்.