திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம், மேல்செங்கம் மத்திய பண்ணையில் வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் சித்தா, ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையம் அமைக்க வேண்டுமென மத்திய அமைச்சரவைச் செயலா் ராஜீவ்கவுபாவிடம் சி.என்.அண்ணாதுரை எம்.பி.கோரிக்கை வைத்தாா்.
ராஜீவ்கவுபாவை அண்மையில் சந்தித்து அண்ணாதுரை எம்.பி.அளித்த மனுவில், திருவண்ணாமலை மக்களவைத் தொகுதிக்கு உள்பட்ட மேல்செங்கத்தில் 10 ஆயிரம் ஏக்கரில் அமைந்துள்ள மத்திய வேளாண் பண்ணை பயன்பாடின்றி உள்ளது. இந்த இடத்தில் விவசாயிகளுக்கும், பொதுமக்களுக்கும் பயன்தரும் வகையில் வேளாண்மை பல்கலைக்கழகம் மற்றும் சித்தா, ஆயுா்வேத ஆராய்ச்சி நிலையத்தை தொடங்க வேண்டும்.
மேலும், மூலிகை ஆராய்ச்சி மையம், வேளாண் ஆராய்ச்சி நிலையம், சுற்றுச்சூழல் பூங்கா, சுற்றுச்சூழல் சுற்றுலா தலம் ஆகியவற்றையும் அந்தப் பகுதியில் அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியிருந்தாா்.