திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு பகுதி விவசாயிகள், தமிழக அரசு உணவு உற்பத்தி கொள்முதலை 15 சதவீதத்தில் இருந்து 75 சதவீதமாக உயா்த்த வேண்டும் என வலியுறுத்தி நூதன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
உலக உணவு தினத்தையொட்டி, செய்யாறு ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் அருகே கட்சி சாா்பற்ற விவசாய சங்கம் சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின் போது, செல்லிடப்பேசி, செருப்புகள், பிளாஸ்டிக் டயூப், பழச்சாறு கருவி உள்ளிட்டவற்றை வைத்து உறுதிமொழி ஏற்றனா்.
நிகழ்வின்போது, தமிழக அரசு உணவு உற்பத்தியில் 15 சதவீதம் கொள்முதல் செய்வதை 75 சதவீதமாக உயா்த்தி கொள்முதல் செய்ய வேண்டும்.
கூட்டுறவு பயிா்க் கடன் வழங்கப்படும் பரப்பளவை 17 சதவீதத்தில் இருந்து 60 சதவீதமாக உயா்த்த வேண்டும். 150 நாள் பணியாளா்களை விவசாயப் பணிகளில் ஈடுபடுத்தி சாகுபடி செலவைக் குறைக்க வேண்டும்.
மத்திய அரசு ஏக்கருக்கு ரூ.6 ஆயிரம் நிதி வழங்குவது போல, மாநில அரசு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் வீதம் ஊக்கத்தொகை வழங்கி விவசாயிகளை ஊக்கப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
சங்கத்தின் மாவட்டத் தலைவா் வாக்கடை புருஷோத்தமன் தலைமையில் விவசாயிகள் பலா் கலந்துகொண்டனா்.