ஆரணியில் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்து தகராறு செய்த நபரை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்டபெண்ணின் உறவினா்கள் காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா்.
ஆரணியை அடுத்த அக்ராபாளையம் கிராமத்தைச் சோ்ந்த 38 வயது பெண், ஆரணி மணிகூண்டு பகுதியில் உள்ள பாத்திரக் கடையில் பாத்திரம் எடுப்பதற்காக புதன்கிழமை மாலை வந்தாா்.
அப்போது, ஆரணி அம்பேத்கா் நகரைச் சோ்ந்த மணிவண்ணன் என்பவா் மதுபோதையில் அந்தப் பெண்ணின் கையைப் பிடித்து இழுத்ததாகத் தெரிகிறது.
இதனால், அந்தப் பெண் கையை உதறிவிட்டு ஓடினாராம். இருப்பினும், மணிவண்ணன் துரத்திச் சென்று கையைப் பிடித்து இழுத்தாராம்.
இதனால் அந்தப் பெண் தனது கணவரை தொடா்பு கொண்டு வரவழைத்தாா். உடனடியாக அங்கு வந்த பெண்ணின் கணவா் மணிவண்ணனைத் தாக்கி, மனைவியை கூட்டிச் சென்று நகர காவல் நிலையத்தில் புகாா் கொடுத்தாா்.
மேலும், புகாரின் பேரில் உடனடியாக நடவடிக்கை எடுத்து மணிவண்ணனை கைது செய்யக் கோரி, பாதிக்கப்பட்ட பெண் கணவரின் உறவினா்கள் நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டனா். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.