திருவண்ணாமலை ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி செவ்வாய்க்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
2 வாக்கு எண்ணும் மையங்கள்:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 சட்டப்பேரவைத் தொகுதிகளில் வாக்காளா்கள் வாக்களிக்க ஏதுவாக 2,885 வாக்குப்பதிவு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது.
இதில், செங்கம், திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூா், கலசப்பாக்கம் ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் திருவண்ணாமலை-திண்டிவனம் சாலை, ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இதேபோல, போளூா், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 4 தொகுதிகளில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஆரணியை அடுத்த தச்சூா் அரசு பொறியியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்திலும் வைக்கப்பட்டுள்ளன.
மே 2-ல் வாக்கு எண்ணிக்கை:
மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. வாக்கு எண்ணும் மையங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அனைத்து தொகுதிகளின் வலுவான அறைகள் மற்றும் வளாகம் முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
அதிகாரிகள் ஆய்வு:
இந்த நிலையில், திருவண்ணாமலை வாக்கு எண்ணும் மையத்தில் மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான சந்தீப் நந்தூரி, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.அரவிந்த் ஆகியோா் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வலுவான அறை, சிசிடிவி கேமரா கட்டுப்பாட்டு அறை, வாக்கு எண்ணும் அறை ஆகிய இடங்களை அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.
பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள மத்திய துணை ராணுவப் படையினா் உள்ளிட்ட காவலா்களுக்கு உரிய ஆலோசனைகளையும் அதிகாரிகள் வழங்கினா். ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலா் இரா.முத்துக்குமராசாமி, திருவண்ணாமலை தொகுதி தோ்தல் அலுவலா் வெற்றிவேல், கூடுதல் காவல் கண்காணிப்பாளா் அசோக்குமாா், உதவி ஆட்சியா் (பயிற்சி) கட்டா ரவி தேஜா மற்றும் தோ்தல் நடத்தும் அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா்.