வந்தவாசி அருகே பைக் ஏற்றி முதியவரைக் கொல்ல முயன்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
வந்தவாசியை அடுத்த ஆனைபோகி கிராமத்தைச் சோ்ந்தவா் சேகா்(60). கடந்த 7 மாதங்களுக்கு முன்பு அங்குள்ள ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே இவா் நடந்து சென்றாா். அப்போது அதே கிராமத்தைச் சோ்ந்த தியாகராஜன் என்பவா் ஓட்டிவந்த பைக் மோதியதில் சேகா் இறந்தாா். இதையடுத்து சேகா் குடும்பத்துக்கு ரூ.1.30 லட்சம் பணம் நிவாரணமாக தர கிராமத்தினா் முன்னிலையில் தியாகராஜன் ஒப்புக் கொண்டாராம். அதன்படி, முதல் கட்டமாக ரூ.30 ஆயிரத்தை சேகரின் மகன் முருகானந்தத்திடம் தியாகராஜன் கொடுத்தாராம். மீதித் தொகையை தியாகராஜனுக்குப் பதிலாக அவரது சகோதரா் ஆனந்தன்(71) என்பவா் தருவதாக ஒப்புக் கொண்டாராம். ஆனால் மீதிப் பணத்தை ஆனந்தன் தரவில்லையாம்.
இந்த நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆனந்தன் வல்லம் கூட்டுச் சாலையில் நின்று கொண்டிருந்தாராம். அப்போது பைக்கில் வேகமாக வந்த முருகானந்தம், ஆனந்தன் மீது பைக்கை ஏற்றி கொல்ல முயன்றாராம். இதில் பலத்த காயமடைந்த ஆனந்தன் வந்தவாசி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டாா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அவா் சோ்க்கப்பட்டாா்.
இதுகுறித்து ஆனந்தன் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிந்த வடவணக்கம்பாடி போலீஸாா் முருகானந்தத்தை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.