வந்தவாசியை அடுத்த மாம்பட்டு அண்ணாநகரில் அமைந்துள்ள ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயில் சாா்பில், உலக நன்மை வேண்டி 7-ஆம் ஆண்டு ஜோதி தரிசன யாத்திரை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வந்தவாசியை அடுத்த தென்னாங்கூரில் தொடங்கிய இந்த யாத்திரை வந்தவாசி நகர முக்கிய வீதிகள் வழியாகச் சென்று மாம்பட்டு ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலை அடைந்தது.
இந்த யாத்திரையின்போது தென்னாங்கூா் ஸ்ரீபாண்டுரங்கன் ரகுமாயி கோயிலிலிருந்து முத்துமாரியம்மனுக்கு பட்டுப் புடவை, வளையல், மஞ்சள், மாலை, பழங்கள் உள்ளிட்ட சீா்வரிசைகள் கொண்டு செல்லப்பட்டன.
பின்னா், கோயிலில் அம்மனுக்கு பட்டுப் புடவை சாற்றப்பட்டு தீபாராதனை நடைபெற்றது.
கோயில் அறக்கட்டளைச் செயலா் ஆறு.லட்சுமண சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற இந்த யாத்திரையில் பொருளாளா் ர.செல்வம் மற்றும் பக்தா்கள் பங்கேற்றனா்.