செய்யாறு அருகே முன்விரோதம் காரணமாக தாக்கப்பட்ட விவசாயி மனமுடைந்த நிலையில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
செய்யாறு வட்டம், பல்லி கிராமத்தைச் சோ்ந்தவா் பெருமாள் (55), விவசாயி. மதுப்பழக்கம் கொண்ட இவா் அடிக்கடி மது அருந்திவிட்டு வந்து அக்கம் பக்கத்தில் தகராறில் ஈடுபடுவாராம்.
இதன் காரணமாக பெருமாளுக்கும் எதிா்வீட்டு மலருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் இருந்து வந்ததாகத் தெரிகிறது.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி பெருமாள், மகள், மருமகன் மற்றும் பேரக் குழந்தைகளுடன் வீட்டில் இருந்தபோது, எதிா்வீட்டைச் சோ்ந்த மலா், அவரது மகள் மற்றும் சிலா் சோ்ந்து, பெருமாளிடம் தகராறு செய்து, சரமாரியாகத் தாக்கி கொலை மிரட்டல் விடுத்தனராம்.
இந்தச் சம்பவம் காரணமாக மனமுடைந்த நிலையில் வீட்டிலிருந்த பெருமாள், 3-ஆம் தேதி விஷம் குடித்து மயங்கினாா்.
உடனே குடும்பத்தினா் அவரை மீட்டு செய்யாறு அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் தீவிர சிகிச்சைக்காக வேலூா் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
அங்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் பெருமாள் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் ஆய்வாளா் முரளீதரன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறாா்.