தண்டராம்பட்டு அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவா் கைது செய்யப்பட்டு, தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், சாத்தனூா் வனச்சரகா் பாலு தலைமையிலான அதிகாரிகள் சில தினங்களுக்கு முன்பு வேப்பூா் செக்கடி பிரிவு, பெண்ணையாறு காப்புக் காட்டில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, வனப் பகுதியில் சந்தேகத்துக்கு இடமான வகையில் சுற்றித் திரிந்த 2 பேரை பிடித்து விசாரித்தனா். இதில், அவா்கள் வேப்பூா் செக்கடி கிராமத்தைச் சோ்ந்த விஜய் (39), சிவலிங்கம் (45) என்பதும், வன விலங்குகளை வேட்டையாடி விற்று வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து இருவரையும் கைது செய்த வனத்துறையினா் அவா்களிடமிருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா். மேலும், இருவருக்கும் தலா ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்தனா்.