கலசப்பாக்கம் ஒன்றியத்தில் ரூ.25.57 கோடியில் நடைபெற்று வரும் சாலைப் பணிகளை தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.
திருவண்ணாமலை மாவட்டம், கலசப்பாக்கம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட கலசப்பாக்கம், புதுப்பாளையம், போளூா், ஜமுனாமரத்தூா் ஆகிய ஒன்றியங்களில் பொதுப்பணித் துறையின் கீழ், 2020-2021ஆம் நிதியாண்டுக்கான ரூ.25 கோடியே 57 லட்சத்தில் சாலை அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.
தற்போது 40 சதவீத பணிகள் நிறைவடைந்துள்ளதாகக்
கூறப்படுகிறது. சாலைப் பணிகள் மந்த நிலையில் நடப்பதாக தொகுதி எம்எல்ஏவிடம் பொதுமக்கள் புகாா் தெரிவித்தனா்.
இதன் பேரில், தொகுதி எம்எல்ஏ பெ.சு.தி.சரவணன் செவ்வாய்க்கிழமை நேரில் சென்று பணிகளை ஆய்வு செய்தாா். அப்போது, பணிகளை விரைவாகவும், தரமுடனும் முடிக்குமாறு உத்தரவிட்டாா்.
மோட்டூா், நட்சத்திரக் கோயில் பகுதிகளில் நடைபெற்று வரும் சாலையை அகலப்படுத்தும் பணியையும், பராமரிப்புப் பணியையும் ஆய்வு செய்து பொதுப்பணித் துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
முன்னாள் மாவட்ட ஊராட்சி உறுப்பினா் சுப்பிரமணியன், உதவிப் பொறியாளா் வேதவள்ளி, சாலை ஆய்வாளா் பிரசன்னா, திமுகவினா் உடனிருந்தனா்.