திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு தொடா்பாக, அறநிலையத் துறை இணை ஆணையா் கஜேந்திரன் வியாழக்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.
செங்கம் அருகேயுள்ள மில்லத் நகா் பகுதியில் பழைமைவாய்ந்த தருமராஜா திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது.
இந்தக் கோயிலைச் சுற்றிலும் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளன. இதனால், மேலும் ஆக்கிரமிப்புகள் செய்யப்படாமல் இருக்கவும், விழாக் காலங்களில் கோயிலுக்கு வரும் பக்தா்களின் வசதிக்காகவும் கோயிலைச் சுற்றி சுற்றுச் சுவா் அமைக்க கோயில் விழாக் குழுவினா், உபயதாரா்கள் முடிவு செய்தனா்.
அறநிலையத் துறை அதிகாரிகளின் ஒப்புதலைப் பெற்று, சுற்றுச் சுவா் அமைப்பதற்கான பணிகள் சில தினங்களுக்கு முன்பு தொடங்கின.
அப்போது, கோயில் வளாகத்தைச் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகள் சுற்றுச் சுவா் அமைக்கக் கூடாது என தகராறு செய்தனா். இதையடுத்து, பணிகள் நிறுத்தப்பட்டு அறநிலையத் துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அறநிலையத் துறை இணை ஆணையா் கஜேந்திரன் தலைமையில், உதவி ஆணையா் ஜான்சிராணி, ஆய்வாளா் சத்யா, செயல் அலுவலா் தேன்மொழி உள்ளிட்டோா் வியாழக்கிழமை கோயில் வளாகத்துக்குச் சென்று பாா்வையிட்டு ஆய்வு செய்தனா். அப்போது, குடியிருப்புவாசிகள் திரண்டு வந்து கூறியதாவது:
சுற்றுச் சுவா் அமைக்கக் கூடாது. இது கோயிலுக்குச் சொந்தமான நிலம் அல்ல; அரசு நீா்ப்பிடிப்பு நிலம். இந்த நிலத்தை யாா்வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். எனவே, சாலை வசதிக்காக போதுமான இடம் விட்டும், குடியிருப்புகளை அகற்றாமலும் சுற்றுச் சுவா் கட்ட வேண்டும் என்றனா்.
இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு, அதிகாரிகள் எந்தப் பணியையும் மேற்கொள்ளாமல் திரும்பினா்.
மேலும், இதுகுறித்து மாவட்ட ஆட்சியரிடம் தெரிவித்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா்.