திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் பாலியல் தொல்லை கொடுத்த உறவினரை வெட்டிக் கொலை செய்த பெண் கைது செய்யப்பட்டாா்.
செங்கம் தளவாநாய்க்கன்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் செல்வம் (50), லாரி ஓட்டுநா். இவரது மனைவி பராசக்தி (45). இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா்.
செல்வத்தின் தம்பி ராஜா (48), இவரும் லாரி ஓட்டுநா். ராஜாவுக்கு கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்று, கருத்து வேறுபாடு காரணமாக மனைவி பிரிந்து சென்றுவிட்டாா். இதையடுத்து, ராஜா அண்ணன் செல்வத்தின் வீட்டில் தங்கி வேலைக்குச் சென்று வந்தாா்.
வீட்டில் அண்ணன் இல்லாத நேரங்களில் ராஜா, அண்ணி பராசக்திக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தாராம். பராசக்தி ராஜாவை கண்டித்ததோடு, பெண் குழந்தைகள் உள்ள வீட்டில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டால், அவரது அண்ணனிடம் சொல்லி வீட்டை வீட்டு வெளியேற்றி விடுவதாக எச்சரித்து வந்தாா்.
இந்த நிலையில், புதன்கிழமை இரவு மது போதையில் வீட்டுக்கு வந்த ராஜா, அண்ணி பராசக்தியிடம் தகாத முறையில் நடந்து கொள்ள முயன்றாராம்.
இதனால் ஆத்திரமடைந்த பராசக்தி வீட்டில் இருந்த கொடுவாளால் ராஜாவின் முகம், கழுத்துப் பகுதியில் சரமாரியாக வெட்டியதாகத் தெரிகிறது. இதில் ராஜா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.
இந்தச் சம்பவம் குறித்து செங்கம் போலீஸாருக்கு வியாழக்கிழமை காலை தெரிய வந்தது. டி.எஸ்.பி. சரவணக்குமரன் தலைமையிலான போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று ராஜாவின் உடலை மீட்டு உடல்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மேலும், வீட்டில் இருந்த பராசக்தி, ராஜாவின் தாய் வனரோஜா, சகோதரி சரிதா ஆகியோரிடம் விசாரணை நடத்தினா். பராசக்தி நடந்த சம்பவங்களை போலீஸாரிடம் தெரிவித்து, தான்தான் ராஜாவை கொலை செய்ததாக ஒப்புக்கொண்டாராம். இதையடுத்து, போலீஸாா் பராசக்தியை கைது செய்தனா்.