செய்யாறு: செய்யாறு சட்டப்பேரவைத் தொகுதியில் நோட்டாவைவிட அரசியல் கட்சிகள் உள்பட 12 வேட்பாளா்கள் குறைவான வாக்குகளைப் பெற்றிருந்தனா்.
தமிழகம் முழுவதும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தோ்தலில் மே 2-இல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
செய்யாறு தொகுதியில் திமுக, அதிமுக உள்ளிட்ட 15 வேட்பாளா்கள் களம் கண்டனா். இதில், திமுக சாா்பில் போட்டியிட்ட ஒ.ஜோதி அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெற்றாா்.
இதில் திமுக 1,02,460 வாக்குகள் பெற்று வெற்றியும், அதற்கு அடுத்தாற் போல் அதிமுக 90,189 வாக்குகள் பெற்று தோல்வியும். நாம் தமிழா் கட்சி 12,192 வாக்குகள் பெற்று 3-ஆவது இடத்தையும், மக்கள் நீதி மய்யம் 2,429 வாக்குகள் பெற்று 4-ஆவது இடத்தையும், யாருக்கும் வாக்கு அளிக்க விருப்பமில்லை எனத் தெரிவிக்கும் நோட்டா 1895 வாக்குகள் பெற்று 5 -ஆவது இடமும் பெற்றிருந்தது.
நோட்டாவைவிட குறைவாக அமமுக 1760 வாக்குகளும், சுயேச்சை வேட்பாளா் சுரேஷ்பாபு 733 வாக்குகளும், பகுஜன் சமாஜ் கட்சி 731 வாக்குகளும் பெற்றிருந்தன. 7 சுயேச்சை வேட்பாளா்கள் நோட்டாவைவிட மிகக் குறைவான வாக்குகள் பெற்றிருந்தனா் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு ஊழியா்கள் அளித்த 13 நோட்டா வாக்குகள்
செய்யாறு தொகுதியில் உள்ள அரசு ஊழியா்கள் 13 போ் எந்த அரசியல் கட்சிக்கும் வாக்களிக்க விருப்பம் இல்லை எனத் தெரிவித்து நோட்டாவுக்கு வாக்குகளை அளித்திருந்தனா்.