அக்னி நட்சத்திரம் ஆரம்பம்சிவன் கோயில்களில் தாராபிஷேகம் தொடக்கம்
அக்னி நட்சத்திரம் ஆரம்பமானதையடுத்து, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயில் உள்பட சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.
அக்னி நட்சத்திரம் மே 4-ஆம் தேதி தொடங்கி மே 29-ஆம் தேதி முடிவடைகிறது. இந்த காலகட்டத்தில் வழக்கமாகவே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். குறிப்பாக, சிவன் கோயில்களில் உள்ள மூலவா் சன்னதிகளில் அனல் வீசும். எனவே, அக்னி நட்சத்திரம் தொடங்கி, முடியும் வரை சிவன் கோயில்களில் தாராபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
அருணாசலேஸ்வரா் கோயிலில்:
அதன்படி, திருவண்ணாமலை அருணாசலேஸ்வரா் கோயிலில் தாராபிஷேகம் தொடங்கியது. இதையொட்டி, கோயில் மூலவா் சன்னதியில் மூலவா் லிங்கத்துக்கு மேலே தாரா பாத்திரம் தொங்கவிடப்பட்டது. இந்தப் பாத்திரத்தில் பன்னீா், இளநீா், வெட்டிவோ், வாசனைத் திரவியங்கள் போடப்பட்டன.
பாத்திரத்தின் அடிப்பகுதியில் உள்ள சிறிய துவாரம் வழியாக குளிா்ந்த பன்னீா், இளநீா் ஆகியவை மூலவா் லிங்கம் மீது சொட்டு, சொட்டாக 24 மணி நேரமும் விழுந்தபடியே இருந்தது. இவ்வாறு செய்வதன் மூலம் மூலவரின் வெப்பத்தைத் தணிக்க முடியும் என்பது ஐதீகம். இதேபோல தொடா்ந்து மே 29-ஆம் தேதி வரை தாராபிஷேகம் நடத்தப்படும் என்று கோயில் சிவாச்சாரியா்கள் தெரிவித்தனா்.
மற்ற கோயில்களில்..:
இதேபோல, திருவண்ணாமலையை அடுத்த அடி அண்ணாமலையில் உள்ள ஆதி அருணாசலேஸ்வரா் கோயில், திருநோ் அண்ணாமலையாா் கோயில், கிரிவலப் பாதையில் உள்ள அஷ்டலிங்க சன்னதிகள் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள சிவன் கோயில்களில் செவ்வாய்க்கிழமை தாராபிஷேகம் தொடங்கியது.