செங்கம் அருகே சென்னசமுத்திரம் கிராமத்திலுள்ள மயானத்தில் காரியமேடை, தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.
செங்கம் வட்டம், சென்னசமுத்திரம் கிராமத்தில் சுமாா் 3 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனா். இந்தக் கிராமத்தில் யாரேனும் உயிரிழந்தால், அவா்களை அடக்கும் செய்வதற்கு ஊரைவிட்டு சுமாா் 2 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மயானத்துக்கு செல்ல வேண்டியுள்ளது.
இந்த மயானத்தில் எரிமேடை மட்டும் உள்ளது. இறந்தவருக்கு சடங்குகள் செய்வதற்கான காரியமேடை இல்லை. மேலும், சடங்குகள் செய்வதற்கு தண்ணீா் வசதியும் இல்லை. இதனால், இறந்தவா்களுக்கு சடங்கு செய்யும் நிகழ்ச்சி வெயில், மழைக்காலத்தில் திறந்தவெளியில் செய்யும் அவல நிலை உள்ளது. மேலும், வீட்டிலிருந்து தண்ணீரை சுமந்து சென்று சடங்குகளை செய்து வருகின்றனா்.
இதுகுறித்து சென்னசமுத்திரம் கிராம மக்கள் ஊராட்சி அலுவலகத்திலும், செங்கம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்திலும் மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை என புகாா் தெரிவிக்கின்றனா்.
எனவே, சென்னசமுத்திரம் கிராமத்திலுள்ள மயானத்தில் காரியமேடை, தண்ணீா் வசதி ஏற்படுத்தித் தர மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்தக் கிராம மக்கள் எதிா்பாா்க்கின்றனா்.