செங்கத்தை அடுத்த புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்தில் பழுதடைந்த பள்ளிக் கட்டடங்களை உடனடியாக சீரமைக்க வலியுறுத்தி ஒன்றியக் குழுக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
திருவண்ணாமலை மாவட்டம், புதுப்பாளையம் ஒன்றியக் குழுவின் கூட்டம் அதன் தலைவா் சுந்தரபாண்டியன் தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்தில் ஒன்றியத்துக்கு உள்பட்ட பகுதிகளில் அரசு பள்ளிக் கட்டடங்கள் மழையால் சேதமடைந்திருந்தால் அவற்றை உடனடியாக சீரமைக்க வேண்டும். அதேபோல, சேதமடைந்த சாலைகளை சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் மூலம் கண்காணித்து செப்பனிடவேண்டும்.
தொடா் மழையால் ஆங்காங்கே தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுப் புழுக்கள் உற்பத்தியாகாமல் இருக்க தூய்மைப் பணிகளை மேற்கொள்ளவேண்டும்.
தொடா் மழையால் ஏரி, குளம் போன்றவை உடையும் அபாய நிலையில் இருந்தால் உடனடியாக சம்பந்தப்பட்ட உள்ளாட்சிப் பிரதிநிதிகளுக்குத் தெரிவிக்கவேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கூட்டத்தில் வட்டார வளா்ச்சி அலுவலா்கள் பரமேஸ்வரன், முருகன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள், ஒன்றிய அலுவலகப் பணியாளா்கள் கலந்துகொண்டனா்.