போளூா் அருகே ஏரி உபரிநீா் குடியிருப்புகளுக்குள் புகுந்ததால் கிராம மக்கள் ஞாயிற்றுக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த வெண்மணி ஊராட்சிக்கு உள்பட்ட பாப்பாம்பாடி கிராமத்தில் சின்ன ஏரி உள்ளது.
தொடா் மழையால் இந்த ஏரி அண்மையில் நிரம்பி, உபரிநீா் வெளியேறுகிறது. உபரிநீா் கிராமத்தில் உள்ள குடியிருப்புகளைச் சூழ்ந்தது; மேலும் வீடுகளிலும் புகுந்தது.
ஏரிக் கால்வாய்களை சீரமைக்கவும், தண்ணீரை வெளியேற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் ஊராட்சி மன்றத் தலைவா் கணேசன் மற்றும் வருவாய்த் துறையினரிடம் 4 நாள்களுக்கு முன்பு கோரிக்கை வைத்ததாகத் தெரிகிறது.
இதுகுறித்து நடவடிக்கை ஏதும் எடுக்கப்படாததால், ஆத்திரமடைந்த பாப்பாம்பாடி கிராம மக்கள் அருகே வேலூா்-திருவண்ணாமலை புறவழிச் சாலையில், பாஜக போளூா் ஒன்றியத் தலைவா் வெங்கடேசன் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவலறிந்த காவல் துறையினா் விரைந்து வந்து தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தனா். இதை ஏற்று கிராம மக்கள் மறியலைக் கைவிட்டனா்.